Archive for the ‘எதிர்வினை’ Category

துயர் விழுந்த தேசத்தின் வலி

வலிகளை அதிகமாக வாங்கி
ஈராண்டு நிறைவடைந்திருக்கிறது

வலிகளோடு இன்னும் அதிக வலிகளே
நெருக்கமாகிக் கொண்டிருக்கின்றன

துயர்மிகு காலத்தில் பல யுகத்தின் மழை
கந்தகக் குண்டுகளாய் கொட்டித் தீர்த்தது

பதுங்கு குழிகளுக்குள் மக்கள்
அடைபட்டுப்போயினர்
மரண வாசல் கதவு மக்களுக்காய் திறக்கப்பட்டது

உயிர்ப்பிச்சை கேட்டு அழுதவர்கள்
குண்டுகளையும் ரவைகளையும் பருகினர்;; கருகினர்

புலத்தில்
கோட்டை கோபுரங்களது செவிப்பறை கிழிய
உறவுகள் கத்தினார்கள் கதறினார்கள்
வீதியில் வேலியிட்டு அரசர்களையும் ராணிகளையும் கூவியழைத்தார்கள்

முழுநெருப்பாய் தம்முடலை எரித்து
வலிகளை உணர்த்தினார்கள்

வெள்ளைக் கோட்டை அரசர்களும் ராணிகளும்
காதுகளில் ரப்இ பொப் இசைகளை செருகியபடி
ஊழித்தாண்டவத்துக்கு உரமிட்டுக்கொண்டிருந்தார்கள்

முள்ளிவாய்க்காலில் பிணங்கள் சிதறிக்கொண்டிருந்தன

இப்போது
பிணங்களை பேசவிடாது
புதைகுழிகளுக்கு மேல் சித்தனை
பரிநிர்வாண நிலையில் உட்கார்த்தி வைத்திருக்கிறார்கள்

சித்தனின் சீடர்களும் பரிவாரங்களும்
எங்கள் குழந்தைகளது
கபாலங்களையும் எலும்புத் துண்டங்களையும்
ஒவ்வொன்றாக எடுத்து வைத்து பிரித்தோதுகின்றனர்

துட்டகைமுனுக்கள்
நெடுஞ்சாலைகள் வழியேயும்…
புதைகுழித் தோட்டங்களிலும்…
விருட்சங்களின் கீழேயும்…
முள்விதை எறிந்துகொண்டிருக்கிறார்கள்…..

மரணமில்லாத எழுத்துகளை ரூபன் நீ எழுதிக்கொண்டிருக்கிறாய்…..

மக்களது வலிகளைத்தாங்கி
காலத்தை செப்பனிடும் வார்த்தைகளை
நடு நிசியிலும் பகல் பொழுதிலுமாய்
ரூபன் நீ துயிலாது எழுதிக்கொண்டிருக்கிறாய்…

கடந்துபோன துயர் செறிந்த காலத்தை
துப்பாக்கிகள் நிர்ணயித்த போதும்
நீ மறுதலித்து எழுதிக்கொண்டிருந்தாய்

உனது பேனாவின் வீச்சில்
ஒரு கனல் எரிந்துகொண்டிருந்தது

மைபூசிய முகங்கள் கனலில் எரிந்து சாம்பலாயின

ஊடகப் பள்ளியின் பத்திரிகையை
உனது எழுத்துக்கள் நிறைத்திருந்தபோது
“எழுத்தாணி” கனதியானது
எங்களது மகிழ்வு உச்சத்தில் ஏறியது

அப்போது உனது பெயர் தவறி விழுமென
யாருமே நினைத்திருக்கவில்லை

இப்போது
எல்லோருமே சொல்கிறார்கள்
ரூபன் இறந்துவிட்டானென்றும்
எங்களைவிட்டு பிரிந்துவிட்டானென்றும்

இல்லை இல்லை
மரணமில்லாத எழுத்துக்களை
ரூபன் நீ எழுதிக்கொண்டிருக்கிறாய்

ஒரு அகதியின் அவலம்

மனசில் பாரச்சிலுவைகளைச் சுமந்தபடி
எல்லோரும் நடக்கிறார்கள்……………

பாதங்கள் வலிகொள்வதாக
பாதங்களே சொல்கின்றன.
கல்லுகளையும், முள்ளுகளையும்
மேடுபள்ளங்களையும்
தாண்டி விரைகின்றோம்.
விஷ ஜந்துகள் இடையில் வந்தால்
விலத்திப் போகிறோம்.

எம்மையறியாமலே கால்களுக்கு
இடையிடையே,
வேகங்கள் பூட்டப்படுகின்றன.
இன்னும் நடப்பதற்கு
பாக்கி அதிகம் இருக்கிறது.

தாகம் நாக்கைச் சுடுகிறது மேகம் எங்களை
வெறித்துப்பார்க்கிறது
காற்று
கணத்துக்கு கணம் – எங்கள்
மூச்சை வாங்குகிறது.
இருந்தாலும்
நடக்கிறோம்,தொலை தூரத்தை
தொலைத்துவிட்டாற்போல……….

கிளிகளின் கலகலப்பு
குயில்களின் கும்மாளப் பாட்டு
காக்கைகளின் ஒற்றுமை கீதங்கள்
எவற்றையுமே கேட்க முடியவில்iலை.
நாங்கள் ஊரிழந்து போவதால்
அவை அழுதுகொண்டு எங்கோ பறந்து விட்டனவோ?

வானத்தில் குண்டுகளின் கூவல்கள்
கேட்கின்றன
விளைநிலங்களில் பூக்களும் பிஞ்சுகளும்
பிய்ந்து பிய்ந்து உதிர்கின்றன……….

நாய்களின் ஓலங்கள்
நடுத்தெருவில் மந்தைக் கூட்டங்களின்
உறங்கல்கள் போல்
மக்கள் கூட்டங்கள்
ஒன்று சேர்த்து அழவைக்கின்றன
ஒப்பாரி…….. , முகாரி……..
இரங்கல் திருப்பலியின் இறுதி வடிவமாய்………

நாடோடிப் பாட்டு – எங்கள்
காதுகளில் மட்டுமே எதிரொலித்தன.
இப்போது,
ஈழத்தமிழர் நாங்கள்
நாடோடி
நடைப்பிணங்களான பின்பும்
பிணங்களைச் சுமந்து
நெஞ்சு கிழிந்து இரத்தம் வழிய
திசையறியா திசைநோக்கி
செல்கிறோம்…….

இப்போது,
நெஞ்சை அடைக்கிறது துயரம்.
நீள் தொலைவுவரை
யாருமே இல்லை….!
கள்ளிக்காடுகளையும்,
சாம்பல் பூத்த மேடுகளையும் தவிர,
யாருமே இல்லை..!

தொட்டுத் திரும்புகின்றன
சுடுகாற்று
எங்கள் அழுகுரல்களே
மீண்டும் மீண்டும் எதிரொலித்து
எங்கள் காதுகளில் விழுகின்றன……..

நடந்து வந்த தூரங்களை
எங்களால் கணக்கிலிட முடியவில்லை.
இழந்துவந்த ஊர்களைச் சொல்ல
நாவுக்குப் பலமில்லை-வேணுமென்றால்
நிலத்தில் விழுகின்ற
கண்ணீர்த்துளிகளை எண்ணிக்கொளுங்கள்
எங்கள் பரிதாபம் புரியும்.

மாடிமனைகள்,கோவில் குளங்கள்
பாடித்திரிந்த வயல்வெளிகள்
முற்றத்து வெளியில்
கிளித்தட்டுப் மறித்துப்பெற்ற
காய், பழங்கள்
மாலை ஏழுமணி என்றவுடன்
அரட்டையடிக்கும் ஆலமரக்கட்டு
களிப்பூட்டும் வெள்ளையண்ணையின்
நீள்பனைக் கள்ளு
செல்லாச்சியின் பழஞ்சோத்துத் தண்ணியும்
பனம் பினாட்டும்
இன்னும் என்னென்னவோ
எல்லாம்………………..
என் நினைவுகளி;ல் நின்று
நிழலாடி மறைகின்றன-இப்படி
எத்தனை ஊர்களை இழந்து வந்தோம் – இன்னும்
இதயவலி குறையவில்லை.

இருள் மெல்ல மெல்ல
கௌவிக்கொள்கிறது………
ஆலமரத்தின் விழுதினைப் பிடித்தபடி
மண்ணிலே மெல்ல
சுருண்டு படுக்கிறேன்
அப்பா! என்று – எனது
பிஞ்சு வயது மகனின்
ஆவேசக் குரல் செவிப்பறையை முட்டுகிறது.
துயில் கலைகிறது
அவனது கையிடுக்கிலிருந்த பொம்மை
மெல்ல விழுகிறது.
பிடியுங்கள், அந்தச் சூரியனை
இந்தப் பயங்கர இருளை எரிப்போம் என்றான்.

காலம் எப்போது வரும்…..?

கருமேகக் கூட்டங்களை
இந்த மரம் வீசிக்கலைக்கிறது..!

மரத்தின் ஓரக்கிளைகளில்
ஒடுங்கி ஒதுங்கிக்கொண்டிருக்கும்
பறவைக் குஞ்சுகளை உதிர்;கின்ற இலைகள்
போர்த்திக் கொள்கின்றன….

உறைவிடம் தேடி ஓடிவரும் பறவைகளுக்கும்
அடைக்கலம் கொடுக்கிறது.

மின்னல் வெட்டுகிறது
இடியிடிக்கிறது
பூமியின் ஆச்சரியக் குறியாய்
இந்த தனிமரம் மட்டும் இன்னல்களைத்
தாங்கி நிற்கிறது.

மழை பெய்து
குஞ்சுகள் சாகக்கூடும் என்பதால்-தன்
வயிற்றின் விழுப்புண்களைக் குடைந்து
பறவைகள் பதுங்கிக்கொள்ள
பக்குவம் தேடி வைத்திருக்கிறது

வர்ணபகவான் வக்கிரத்தோடு
மூசுகிறான் பலமாக………..
கோவர்த்தன மலைகூட
நெற்றிக்கண்ணைத் திறக்க மறுக்கிறது

இலைகள் , கிளைகள்
பூக்கள், பிஞ்சுகள்
காய்கனிகள்; எல்லாமே – போராடி
மரணத்துக்குள் உதிர்ந்து விழுகின்றன

மரத்தின் வேர்கள்
வலிதாங்காமல் பூமிக்கடியில்
முனகி அழுகிறது..!

பறவைக் குஞ்சு குருமன்கள்
ஓன்றிரண்டு மடிய
மற்றையவை எல்லாம் – வேறு
புகலிடம் தேடிப் பறக்கின்றன……..

நீண்டவருடங்களின் பின்
பாலைவனமாகிப்போன தேசத்தில்
பட்டமரமாய்
வாழ்வு மறுதலித்து
உதிரங்களை இழந்து
நிர்வாணமாகி நிற்கிறது
இந்தப் பெரு விருட்சம்…!
இப்போதெல்லாம் அவ்விடத்தில்
பயங்கரப் பேய்பிடித்தாற் போல
வெளவால்கள் மட்டும்
தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்க
கொடிய வல்லூறுகள்
வலயம் போட்டு சுற்றிச் சுற்றி அலறுகின்றன.
தனது ஆதிக்க வலயமென
விழியில் வெறிகொண்டு நிற்கின்றன

சொந்தக் கூடுகளுக்கு
திரும்ப முடியாமல்
வறண்டுபோன வாழ்க்கையில்
மீண்டும் மீண்டும் பிறாண்டி
புழுப்பிடிக்கும் முயற்சியில்
பறவைகள் தோற்றுக்கொண்டிருக்கின்றன……

ஐந்து தடவை
குரல் கொடுத்து முடிந்தாயிற்று
இப்போது புதிய இறகுகள் முளைக்க
புதிய பரிமாணத்தோடு
சொந்தக் கூடு திரும்ப – சிறகுகளை
விரித்துக்காட்டுகிறது பறவைகள்
இன்னும் தடையகலவில்லை..!

வானத்தில்
தடையின்றிப் பறக்கவும்
மண்ணில்
காலாற நடந்து கதைபேசவும்
கோவைப் பழம்
பறித்துண்டு விளையாடவும்
சொந்தக் கூடுகளில்
சிற்றின்பக் கலவிகொண்டு
உறவாடி மகிழவும்
காலம் எப்போது வரும்…?

பிணங்களைப் புசிக்க வரும் கபோதி

கபோதி

இரவு 22:55
…………………………………………………
மீண்டும்
வருகிறான் கபோதி

பிணங்களைப் புசிக்க அவன்
வேகமாய் வருகிறான்

அதே
பாசிசப் புன்னகையுடன்
கொலை வெறி நிரம்பிய கரங்களில்
வாளேந்தி வருகிறான்

குறிகளையும், முலைகளையும், யோனிகளையும்
பிடுங்கிப் புசித்தவனை வென்று
நரபசியுடன் வருகிறான்

கொடுவிதியெழுதிய காலத்தில்
மீண்டும்
கபோதியின் வருகை நிகழ்ந்து விட்டதையெண்ணி
ஜனங்கள் அச்சமுற்று அழுகிறார்கள்

இன்னும் இன்னும்
கபோதிக்கு பசியிருப்பதால்

ஜனங்கள் பிணங்களில் இருந்து எழுந்துவிட்டார்கள்.